<p style="font-weight: 400; text-align: justify;">தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள ராயமுண்டான்பட்டியில் வயலில் மாடுகள் மேய்ந்தது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மற்றும் அவரது அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன், எதிர் தரப்பினரைத் தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 6 நபர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூதலூர் அருகேயுள்ள ராயமுண்டான்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவரது மனைவி கனிமொழி (திமுக) வெண்டையம்பட்டி ஊராட்சித் தலைவர் ஆவார். சிவக்குமாருக்கு சொந்த கிராமமான ராயமுண்டாம்பட்டியில் 30 ஏக்கர் நிலம் உள்ளது. குழந்தைகளின் கல்வி வசதிக்காக சிவக்குமார் திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.</p> <p style="font-weight: 400;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://ift.tt/3xttjAn" /></p> <p style="font-weight: 400; text-align: justify;">ராயமுண்டான்பட்டியிலுள்ள அவருக்குச் சொந்தமான நிலங்களை அதே கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (45) என்பவர் பராமரித்து வருகிறார். எனினும், சிவக்குமார் அவ்வப்போது தனது வயலுக்கு நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்வார். இந்நிலையில், சிவக்குமாருக்குச் சொந்தமான வயலில் ராயமுண்டான்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (22), தினேஷ்குமார் (27) ஆகியோருக்குச் சொந்தமான மாடுகள் மேய்ந்துள்ளன. அதை சிவக்குமாரின் வயலில் பணிபுரியும் அறிவழகன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளுர் மக்கள் தலையிட்ட இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.</p> <p style="font-weight: 400; text-align: justify;">இச்சம்பம் குறித்து அறிவழகன் தனது முதலாளியான சிவக்குமாருக்கு தெரியப்படுத்தி உள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிவக்குமார் மற்றும் அவரது அடியாட்கள் 10க்கும் மேற்பட்டோர் காலை பயங்கர ஆயுதங்களுடன் ராயமுண்டான்பட்டி வந்து எதிர்தரப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த பிரச்சனையில் பைக்குகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இதில், மணிகண்டன் (22), ரெங்கராஜ் (25), கருப்பையா (20), தினேஷ்குமார் (27), பிரபாவதி (25), கார்த்திகா (24) ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே எதிர் தரப்பினர் தங்களை தாக்கிவிட்டதாகக் கூறி சிவக்குமாரின் வயலில் வேலை செய்யும் அறிவழகன் (45), அவரது மனைவி பாமா (40), ராஜேந்திரன் (55) ஆகியோர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அட்மிட் ஆகிவிட்டனர்.</p> <p style="font-weight: 400;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://ift.tt/3laeldw" /></p> <p style="font-weight: 400; text-align: justify;">இதில் ராஜேந்திரன் என்பவர் தலித் ஆவார். அவரைத் தாக்கியதாக எதிர் தரப்பினர் மீது புகார் கொடுத்து அவர்கள் அனைவர் மீதும் எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய சிவக்குமார் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பூதலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெண்டையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் தாக்கிய மற்றும் தாக்குதலுக்குள்ளான ஆகிய இரு தரப்பினரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதுவே இரு வெவ்வேறு சமுகமாக இருந்திருந்தால், பெரும் விபரீதமாகி இருக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.</p>
from news https://ift.tt/3p2Dyro
via
0 Comments