30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக வாட் வரி குறைப்பால் டெல்லியில் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைகிறது.
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர் ஏற்றம் கண்டதால் மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகினர். எனவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் மத்திய அரசு கடந்த நவம்பர் 4-ஆம் தேதி குறைத்தது.
இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட் வரி) குறைத்தன. இந்நிலையில் டெல்லி அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''“பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியானது 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன்மூலம், பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 8 குறையும். இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103.97 ரூபாக்கு விற்பனையான நிலையில், இந்த வரி குறைப்பால் நாளை முதல் டெல்லியில் பெட்ரோல் விலை 95.97 ரூபாய்க்கு விற்பனை ஆகும். டெல்லியில் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் டீசல் விலை அங்கு ரூ.86.67 ஆக உள்ளது. மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெரும்பாலான மாநிலங்களில் 28 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெயின் விலை கடந்த சில நாட்களாக 10 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. எனவே, வரும் நாட்களில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rqZAqY
via Read tamil news blog
0 Comments