புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் 'திருவாதிரை' நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில், திருவனந்தபுரம் நாட்டியப்பள்ளி குழந்தைகளின் பாரம்பரிய 'திருவாதிரை' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஐயப்பனுக்கு வாழ்த்துச் சொல்லும் இந்த நடன நிகழ்ச்சி பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று சபரிமலை சன்னிதானத்தில் காலடி வைப்பதும் சாமி தரிசனம் செய்வதும் அந்த ஆண்டு முழுக்க புத்துணர்ச்சியும் சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். ஐயப்ப பக்தர்களை மேலும் மகிழ்விக்கும் விதமாகவும் ஐயப்பனுக்கு நடனத்தின் மூலம் வாழ்த்துகளை சமர்ப்பித்து சாமியை மகிழ்விக்கும் நோக்கிலும் கேரளாவின் பாரம்பரிய 'திருவாதிரை' நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
சபரிமலை சன்னிதானம் பெரிய நடை பந்தல் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியை சபரிமலை சிறப்பு அதிகாரி கிருஷ்ணகுமார் வாரியார், சபரிமலை போலீஸ் கட்டுப்பாட்டு அதிகாரி அஜீத்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
திருவனந்தபுரம் வெஞ்ஞாருமூடு ஜீவ கலா நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த 13 குழந்தைகள் 'திருவாதிரை' நடனம் ஆடி ஐயப்பனை மகிழ்வித்தனர். கணபதி ஸ்துருதியில் துவங்கி,பாரம்பரிய திருவாதிரை ராகங்களான குரிரூட்டம், குறத்திப்பாட்டு உள்ளிட்ட பாடல்களுக்கு தாளம் தப்பாமல் குழந்தைகள் நடனமாடினர்.
புத்தாண்டு தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடந்த குழந்தைகளின் பாரம்பரிய நடனம், அதன் மூலம் சாமிக்கு செல்லும் வாழ்த்து ஆகியன தரிசனத்திற்காக நடை பந்தலில் காத்திருந்த ஐயப்ப பக்தர்களுக்கு பக்தி பரவசமூட்டுவதாக அமைந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pJsv8f
via Read tamil news blog
0 Comments