மும்பையில் ரயில் வரும்போது தண்டவாளத்தை கடக்க முயன்றவரின் பைக் சுக்குநூறாக சிதறிய நிலையில், பைக் ஓட்டியவர் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது இருபக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், விதிகளை மீறி கதவுகளுக்குள் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் மோட்டார் சைக்கிள் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது பைக் மோதி நொறுங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மும்பையில் இந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில், அவசரமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பைக் ஓட்டுபவர் ரயில் நெருங்கி வருவதைப் பார்த்து கடைசி நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடுகிறார், இந்த சம்பவத்தில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, "இந்தியாவில் உள்ள அனைத்து பொறுமையிழந்த ஓட்டுநர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்களிடம் தினமும் இதுபோன்ற வீடியோக்களை காண்பிக்க வேண்டும். இதுபோல அனைத்து ரயில்வே கிராசிங்களிலும் தடைகளைத் தாண்டிச் செல்லும் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/u2pPKjc
via Read tamil news blog
0 Comments