பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்ற பாலிவுட் நடிகர் சோனு சூட்டை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் பிரதமர் அமரீந்தர் சிங் தொடங்கிய புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த தேர்தலில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி, அங்குள்ள மோஹா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் சோனு சூட் இன்று மதியம் திடீரென தனது காரில் வந்தார்.
இதுகுறித்து சிரோமணி அகாலி தள கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். வாக்காளர்களை கவரும் நோக்கில் சோனு சூட் வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதன்பேரில், அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், சோனு சூட்டின் காரை சிறைப்பிடித்து அங்கிருந்து அவரை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/u2UGf7r
via Read tamil news blog
0 Comments