5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே, குஜராத்திற்கு பிரதமர் மோடி சென்றதை அடுத்து, அங்கு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தற்போதே பாஜக தயாராகிவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து அதன் வெற்றிப்பேரணியை குஜராத்தில் நடத்தி, அந்த மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை, இப்போதே பிரதமர் மோடி தொடங்கிவிட்டார் என்றே பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வான ஒரு லட்சம் பேருக்கு மத்தியிலும் உரையாற்றினார். இவை எல்லாம் குஜராத் தேர்தலுக்கு இப்போதே பாஜக தயாராகிவிட்டத்தையே காட்டுவதாக, மூத்தப் பத்திரிகையாளர் மாலன் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே களத்தில் இறங்கி பணியாற்றுவதை பாஜக தனது வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் தேர்தல் பேரணி நடத்தக்கூடாது என்று கூறிவிட்டு, வீடுவீடாகச் சென்று அமித்ஷா வாக்கு சேகரித்தார் என்றும் மாலன் குறிப்பிட்டுள்ளார். தடைகள் இருந்தாலும் மக்களை சந்திக்க பாஜக தவறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் வெற்றிபெற இப்போதே பாஜக வியூகம் வகுத்திருப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவை ஒப்பிடும் போதும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையில் சுணக்கம் இருப்பதாக பத்திரிகையாளர் லட்சுமி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் முதல் பணியாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து, கட்டமைப்பை வலுப்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு போக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோல்வி தரும் அயர்ச்சியை விட, வெற்றி தரும் மகிழ்ச்சி அதிகம் என்பதால் ஒவ்வொரு நாளையும் தேர்தல் நாளாகவே பாஜக கருதி செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/z4JHoO8
via Read tamil news blog
0 Comments