குஜராத்தில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரைச் சேர்ந்தவர் ஷபீர் லால்பரியா (23). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஷபீர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மோஹ்சின் என்பவர் ஷபீரின் மனைவியை கிண்டல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷபீர், மோஹ்சினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அது கைகலப்பாக மாறியது. முடிவில், அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். தொடர்ச்சியாக, இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சமாதானம் பேசுவதற்காக சந்தினி பஜார் பகுதிக்கு வருவது என முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஷபீர் தனது உறவினர்கள் இருவருடன் சந்தினி பஜாருக்கு நேற்று நள்ளிரவு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மோஹ்சியின் உறவினரான சுபேர் என்பவர் யாரும் எதிர்பாராத விதமாக ஷபீரை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ஷபீரை சுபேர் பல முறை குத்தினார். இதில் நிகழ்விடத்திலேயே ஷபீர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுபேர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Vv6UT1e
via Read tamil news blog
0 Comments