சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத்தில், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் தான் கட்சியில் இருப்பதை உறுதி செய்யுமாறு தேசிய தலைமைக்கு கோரிக்கை வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீடு கோரி நீண்ட நாட்கள் நடைபெற்ற பட்டிதர் சமூகத்தினரின் போராட்டத்தின் முகமாக இருந்து, 2017 மாநிலத் தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியால் கட்சியில் இளம் தலைவர் ஹர்திக் படேல். மாநில கட்சிப் பிரிவின் செயல் தலைவராக பணியாற்றி வரும் அவர் இந்த மாத தொடக்கத்தில், மாநிலக் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாக குற்றம் சாட்டினார்.
மாநில காங்கிரஸ் கட்சியின் எந்தக் கூட்டத்திற்கும் தனக்கு அழைப்பு இல்லை என்றும், முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தன்னிடம் ஆலோசனை கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். "கட்சியில் எனது நிலை, நஸ்பந்தி (வாசெக்டமி) செய்து கொள்ளப்பட்ட ஒரு புது மாப்பிள்ளை" என்று அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.
“நான் தற்போது காங்கிரஸில் இருக்கிறேன். நான் காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க மத்தியத் தலைவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். ஹர்திக் காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். அவர்கள் எனது மன உறுதியை உடைக்க விரும்புகிறார்கள்" என்று அவர் இன்று ட்வீட் செய்துள்ளார். பாஜகவின் கோட்டையும், பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டையுமான குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், படேலின் அதிருப்தி காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் பாஜகவை புகழ்ந்து பேசியது அவர் கட்சியில் ஓரங்கட்டப்பட காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க பாஜக வலிமையுடன் இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் குஜராத்தில் வலிமை பெற விரும்பினால் முடிவெடுக்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் சக்தியை மேம்படுத்த வேண்டும் என்று படேல் கூறினார்.
இதையடுத்து பாஜகவில் அவர் சேரப்போவதாக வதந்தி பரவிய நிலையில், அவர், “இல்லை. நான் பாஜகவைப் பற்றி நினைக்கவில்லை. பாஜகவுடன் பேசவில்லை. மக்கள் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபோது, நான் அவரைப் பாராட்டினேன். இதற்குக் காரணம் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் நான் பைடன் கட்சியில் சேருவேன் என்று அர்த்தமா?” என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/OjkwF2K
via Read tamil news blog
0 Comments