பெண் பயணிகளுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்க இமாச்சலப் பிரதேச பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலத்தில் இயங்கும் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கான பயணக்கட்டணத்தில் 50% சலுகை வழங்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு 360 புதிய பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை வாங்குவதற்கு ரூ.160 கோடி வழங்கவும் இமாச்சலப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு (HRTC) இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களுக்கு பேருந்தில் 50% கட்டண சலுகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 15ஆம் தேதி இமாச்சல் தினத்தை முன்னிட்டு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வெளியிட்டார். ஏற்கெனவே மே 1 முதல் கிராமப்புற மக்களுக்கு இலவச வீட்டு குடிநீர் வழங்கவும் இமாச்சல் அரசு அறிவித்தது.
2022 இறுதியில் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. 1985 ஆம் ஆண்டு முதல் இமாச்சலில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. இந்த சூழலில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பாஜக பல யூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவித்து வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/EeJis6O
via Read tamil news blog
0 Comments