இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் தன்னைவிட 28 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அருண் லால், இந்திய கிரிக்கெட் அணிக்காக 1982 முதல் 1989 வரை 16 டெஸ்டுகள், 13 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அருண் லாலுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தாடை புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
இந்நிலையில் அருண் லால் தனது 66-வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். புல்புல் சஹா என்ற 38 வயதான பெண்ணை அருண் லால் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இத்திருமண சடங்குகள் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து அருண் லால் - புல்புல் சஹா இருவரும் கொல்கத்தாவில் நேற்று முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பிறகு கேக் வெட்டித் திருமணத்தைக் கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டாவது மனைவியான புல்புல் சஹா ஆசிரியையாக இருக்கிறார்.
ஏற்கெனவே ரீனா என்பவரைத் திருமணம் செய்திருந்த அருண் லால் பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டார். எனினும் ரீனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருடன் வசித்து வருகிறார். ரீனாவின் சம்மதத்துடன் 2-வது திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: "இந்தியப் பெண்கள் கணவரை பகிர்ந்துக்கொள்ள விரும்புவதில்லை"-அலகாபாத் நீதிமன்றம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1TzVaOu
via Read tamil news blog
0 Comments