அசான்-ஹனுமான் சாலிசா சர்ச்சை எழுந்துள்ள சூழலில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஒரு ட்வீட் செய்துள்ளார், அந்த ட்வீட் வீடியோவில், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, "எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் சாலைகளில் நடத்தும் தொழுகைகளை நிறுத்துவோம். மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றுவோம்" என தெரிவிக்கிறார்.
மகாராஷ்டிராவில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ள நிலையில், ராஜ் தாக்கரேயின் இந்த ட்வீட் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக அவுரங்காபாத்தில் பேசியதற்காக எம்என்எஸ் தலைவர் ராஜ்தாக்கரே மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர காவல்துறை இயக்குநர் ஜெனரல் ரஜ்னிஷ் சேத் தெரிவித்துள்ளார்.
ராஜ் தாக்கரேவின் இந்த ட்வீட் குறித்து பேசிய பாஜக தலைவர் ஷெஜாத் பூனவல்லா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவால் சோனியா காந்தி மற்றும் சரத் பவாரின் அழுத்தத்தின் காரணமாக ஒலிபெருக்கிகளுக்கு எதிராக முடிவெடுக்க முடியவில்லை என்று கூறினார். மேலும், மறைந்த பால்தாக்கரே மற்றும் அவரது கொள்கைகளை உத்தவ் ஜி மறந்துவிட்டார். இந்துத்துவா, வீர் சாவர்க்கர் மற்றும் ராம் மந்திர் ஆகியவற்றில் சமரசம் செய்து கொண்டார் என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை மும்பை சார்கோப் பகுதியில் உள்ள மசூதி அருகே எம்என்எஸ் அமைப்பினர் ஹனுமான் சாலிசாவை ஒலிபெருக்கியில் ஒலிக்கவிட்டனர். இது தொடர்பாக சிஆர்பிசியின் 149வது பிரிவின் கீழ் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு மும்பை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பேசிய ராஜ் தாக்கரே, "மே 4 ஆம் தேதி, ஒலிபெருக்கியில் அசான் சத்தம் கேட்டால், அந்த இடங்களில், ஹனுமான் சாலிசாவை ஒலிபெருக்கியில் இசைக்கவும். அப்போதுதான், இந்த ஒலிபெருக்கிகளின் இடையூறை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று அனைத்து இந்துக்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/UZAVSxo
via Read tamil news blog
0 Comments