காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண் வீட்டார் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ் (25). ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகராஜும், சுல்தானாவும் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நாகராஜ் நேற்று இரவு வேலை முடிந்து ஹைதராபாத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே அவர் வந்த போது, அவரது மோட்டார் சைக்கிளை மறித்த 4 பேர் கொண்ட கும்பல், நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்து உயிருக்கு போராடினார். ஏராளமான வாகனங்களும், பாதசாரிகளும் சென்று வந்த போதிலும் யாரும் நாகராஜை காப்பாற்ற முன்வரவில்லை. இதனால் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சுல்தானாவின் உறவினர்களே இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். கொலை செய்ததை ஒப்புக்கொண்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/mvy0NG7
via Read tamil news blog
0 Comments