கர்நாடக பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, வருங்காலத்தில் மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவிக்கொடி வரலாம் என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
கர்நாடக முன்னாள் அமைச்சரும் அம்மாநில பாஜக தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, எதிர்க்காலத்தில் நாட்டின் தேசியக் கொடியாக 'பகவா' அல்லது காவிக் கொடியாக மாறலாம் எனக் கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். காவிக் கொடி தியாகத்தின் சின்னம் என்றும் அவர் கூறினார்.
“இந்த நாட்டில் காவிக்கொடி நீண்ட காலமாக மதிக்கப்படுகிறது. அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உண்டு. காவிக்கொடி தியாகத்தின் சின்னம். அதை வளர்த்தது ஆர்.எஸ்.எஸ். காவிக்கொடி முன் பிரார்த்தனை செய்கிறோம். காவிக்கொடி இன்று அல்லது ஒருநாள் இந்த நாட்டில் தேசியக் கொடியாக மாறலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று கூறினார் கே.எஸ்.ஈஸ்வரப்பா.
"அவர்கள் [காங்கிரஸ்] எப்பொழுது சொன்னாலும் நாங்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டியதில்லை. நமது அரசியலமைப்பின் படி மூவர்ணக் கொடிதான் தேசியக் கொடி, அதற்குத் தகுதியான மரியாதையை நாங்கள் தற்போது தருகிறோம்," என்றும் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒப்பந்ததாரர் இறந்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஈஸ்வரப்பா, இதற்கு முன்பும் இதே விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். பிப்ரவரி 9ஆம் தேதி “செங்கோட்டை உள்பட எல்லா இடங்களிலும் காவிக்கொடி ஏற்றுவோம். இன்றோ நாளையோ இந்தியா இந்து நாடாக மாறும்.” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Stgwom7
via Read tamil news blog
0 Comments