எதிரி நாட்டு கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இந்திய ராணுவம் தனது ராணுவ வலிமையை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. முப்படைகள் சார்பில் அடிக்கடி புதிய ஏவுகணைச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஒடிசா மாநிலம் பலாசோர் பகுதியில் இந்திய கடற்படை சார்பில் இன்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள இந்த ஏவுகணையானது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது ஆகும். கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை, பலாசோரில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையின்போது கடற்படை ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கடலுக்கு நடுவே வந்து கொண்டிருந்த இலக்கு கப்பலை துல்லியமாக தாக்கி அழித்தது. சென்சார் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதால் இந்த ஏவுகணையிடம் இருந்து எதிரி நாட்டு கப்பல்கள் தப்பிக்க முடியாது என இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, கடற்படையையும், டிஆர்டிஓ நிறுவனத்தையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/HF8qNkB
via Read tamil news blog
0 Comments