இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகளில் கடுமையாகச் சரிவு ஏற்பட்டதால் எல்.ஐ.சி பங்கு வெளியீடு தள்ளிப்போனது. எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீடு (IPO) மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினர். அந்நிய முதலீட்டாளர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை. எல்ஐசி பங்குகள் மே 12-ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசியின் ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் சரிவை சந்தித்தது. தொடர்ந்து சரிந்து வந்த எல்ஐசி பங்கின் விலை இம்மாத துவக்கத்தில் 708 ரூபாய் என்ற அளவு வரை குறைந்தது. இதனால் எல்ஐசி பங்குகளை ஆர்வத்துடன் வாங்கிய முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச்சந்தை நிறைவடைந்தபோது எல்ஐசியின் பங்கின் விலை ரூ. 661.70 ஆக சரிந்தது. அறிமுகமான விலையான ரூ.949 உடன் ஒப்பிட்டால் 2 மாதங்களை நிறைவு செய்வதற்குள் 30 சதவீத சரிவை சந்தித்து விட்டது எல்ஐசி.
எல்ஐசி நிறுவன பங்குகள் விலை தொடர்ந்து சரிவுப்போக்கில் இருப்பது கவலை தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தற்காலிகமான சரிவாக இருந்தாலும் கூட பங்கு முதலீட்டாளர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கு விலக்கல் துறை செயலாளர் துஹின் காந்த பாண்டே இம்மாத துவக்கத்தில் தெரிவித்தார்.
LIC 2.0 என்று மிகப்பெரிய பில்டப்புடன் அறிமுகமானது எல்ஐசி ஐபிஓ. பட்டியலிடப்படும்போது எல்ஐசியின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.4.8 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. பங்குச் சந்தையில் அடியெடித்து வைத்து ரூ.1.2 லட்சம் கோடியை இழந்து இருக்கிறது.
அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் உலகளாவிய பணவீக்கம் ஆகியவை இந்திய பங்குகளுக்கான வெளிநாட்டு தேவையை கடுமையாக பாதித்துள்ளன. எந்த நேரத்திலும் உலகளாவிய சந்தைகளில் பெரும் வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். இதனால் எல்ஐசி பங்கு தொடர்ந்து சரியும் என்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு இன்னும் வலி காத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hr20koF
via Read tamil news blog
0 Comments