(கோப்புப் படம்)
செல்போன் திருடனை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. செல்போன் திருடனை பிடித்ததெல்லாம் வழக்கமாக நடப்பதுதான் என எண்ணலாம். ஆனால் இந்தூரில் நடந்தது வழக்கத்துக்கு மாறாக “மண்டையில் இருந்த கொண்டையை மறந்துட்டேனே” என்ற வடிவேலு பட காமெடியில் வருவது போன்று உள்ளது. திருடிய செல்போனில் இருந்தே ஃபேஸ்புக்கில் ஃபோட்டோ பதிவிட்டதை அடுத்து திருடனே வழிய வந்து சிக்கியிருக்கிறார்.
இந்த திருட்டு வழக்கு தொடர்பாக மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரி ராஜேஷ் ரகுவன்ஷி கூறுகையில், இந்தூரின் பங்காங்கா பகுதியில் செல்போன் திருடிய விவகாரத்தில் ஜாஃபர் என்ற திருடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருடப்பட்ட செல்போனை ஜாஃபர் தனது தாய்க்கு பரிசாக கொடுத்ததோடு, தனது அம்மாவை போட்டோ எடுத்து அந்த மொபைலில் ஏற்கெனவே இருந்த உரிமையாளரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து பதிவும் செய்திருக்கிறார். இதனையறிந்த செல்போனை பறிகொடுத்த உரிமையாளர் சஞ்சய் என்பவர் போலீஸாரிடம் நடந்தவற்றை கூறி புகாரளித்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சஞ்சயின் போனில் இருந்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த பெண்மணியின் போட்டோவை வைத்து திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது. ஒருவழியாக மொபைலை திருடிய ஜாஃபரை கண்டறிந்து அவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மேலும் 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மொபைல்களும் திருடப்பட்டதா எனவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.” என கூடுதல் DCP ராஜேஷ் ரகுவன்ஷி கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/we5pTNB
via Read tamil news blog
0 Comments