கேரளாவின் வர்கலாவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி எட்டு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் வர்கலா அருகில் இருக்கும் செருன்னியூரில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். புத்தன்சந்தையில் காய்கறி கடை நடத்தி வரும் பிரதாபன் (வயது 64), அவரது மனைவி ஷெர்லி (வயது 53), மகன் அகில் (வயது 25), மருமகள் அபிராமி (வயது 24) மற்றும் அவர்களது எட்டு மாதக் குழந்தை ஆகியோர் இந்த தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கிய பிரதாபனின் மூத்த மகன் நிகில் பலத்த தீக்காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களது இரண்டு மாடி வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டிலிருந்து புகை மற்றும் தீ பரவியதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வருவதற்குள், கிட்டத்தட்ட அனைத்து அறைகளும் தீப்பற்றி எரிந்தன. பெரும் முயற்சிக்கு பின்னர் காலை 6 மணிக்கே தீயணைப்பு வீரர்களால் தீயை அணைக்க முடிந்தது. இந்த விபத்தில் சிக்கி அவர்களது வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இந்த தீ விபத்துக்கு மின்கசிவு (ஷார்ட் சர்க்யூட்) தான் காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/7auE0H3
via Read tamil news blog
0 Comments