சட்டமன்றத் தேர்தல், உ.பி முதலமைச்சர் பதவி, ஐபிஎல் ஸ்கோர் என சூதாட்டத்தில் லட்சங்களை குவித்து வந்த 6 பேர் நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் நொய்டா நகரத்தில் செக்டார் 10ல் வசித்து வந்தவர்கள் இம்ரான், அகிலேஷ், ஜாவேத், மொஹ்சின், பர்வேஸ் மற்றும் தாஹிர். இவர்கள் புலந்தசாஹரை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது நடவடிக்கையை, செல்போன் சிக்னல்களை கண்காணிக்க துவங்கினர். ஐபிஎல் போட்டி துவங்கியதும் அவர்களது செல்போனுக்கு துபாயில் இருந்து அழைப்பு வருவதையும், ஆட்டம் குறித்தான தகவல்கள் பகிரப்பட்டு வருவதும் உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர்களது இருப்பிடத்திற்கு காவல்துறையினர் சோதனை நடத்தினர். சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். ₹1.64 லட்சம் ரொக்கம், 12 செல்போன்கள், 20 வங்கிக் கடவுச்சீட்டுகள், 2 வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களது கூட்டுக் கணக்கில் இருந்து ₹4 லட்சத்தை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐபிஎல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தல்கள், உத்தரப் பிரதேச முதல்வர் பதவி உட்பட பல விஷயங்களில் சூதாட்டம் நடத்தியுள்ளதாக கெளதம் புத் நகர் ஏடிசிபி ரன்விஜய் சிங் தெரிவித்தார்.
அவர்கள் தினமும் ₹ 10 லட்சம் வரை பந்தயம் கட்டுவதும், தினசரி ₹ 5,000 முதல் ₹ 50,000 வரை சம்பாதிப்பதும் விசாரணையில் தெரியவந்தது . தினமும் 50 முதல் 60 பேர் வரை சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த கும்பல் டெல்லி, நொய்டா, புலந்த்ஷாஹர் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது. ஆறு பேர் மீதும் சூதாட்டச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/phG3zWd
via Read tamil news blog
0 Comments