Advertisement

Responsive Advertisement

"அமலாக்கத்துறையின் நோட்டீஸ் பிரதமரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது”- நாராயணசாமி காட்டம்

“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, பிரதமர் மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையை காட்டுகிறது” என புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “பாரதிய ஜனதா கட்சியின் அங்கமாக செயல்படுகின்ற அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அரசியல் கட்சி தலைவர்களை மிரட்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். அப்படித்தான் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவையாவும் பிரதமர் மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையுமே காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குப்போட்டு ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் விரைவில் அவர்கள் பக்கமே திரும்பும்” என எச்சரித்தார்.

image

தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து, மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் சென்று போராட்டம் நடத்த உள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையில் புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசும், ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கெனவே 6 மதுபான ஆலைகள் உள்ள நிலையில், மேலும் புதிய ஆலைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பல நூறு கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு கலால் துறையில் பல கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

image

இந்த ஊழல் புகாரில் அதிகாரிகள் விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார்கள். `ஊழலை வேடிக்கை பார்க்க மாட்டேன்’ என்று கூறும் பிரதமர் மோடி புதுச்சேரியில் ஆளும் அரசின் ஊழலை வேடிக்கை பார்ப்பது ஏன்? ஊழல் அரசுக்கு தலைமை தாங்கும் மோடி இனி ஊழலை பற்றி பேசக்கூடாது” என நாராயணசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க... நீச்சல் தெரியாமல் தெர்மாகோல் உதவியுடன் குட்டையில் குளித்த கல்லூரி மாணவன் பலி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/m2fsRlg
via Read tamil news blog

Post a Comment

0 Comments