Advertisement

Responsive Advertisement

குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு சாதகமாக மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொல்கத்தாவில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த மம்தா பானர்ஜி, "குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு எங்களிடம் பாஜக ஆலோசித்திருக்க வேண்டும். அவ்வாறு ஆலோசித்திருந்தால், பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவை நாங்கள் ஆதரித்திருப்போம். பழங்குடி சமூகத்தை சேர்ந்த அவருக்கு நிச்சயமாக நாங்கள் ஆதரவு அளித்திருப்போம். பழங்குடியினருக்கு என்றும் ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் இருந்து வருகிறது" எனக் கூறினார்.

மம்தா பானர்ஜியின் இந்த கருத்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் பாஜகவையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்த திடீர் மனமாற்றத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

image

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, ஆளும் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமித்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதன்படியே, எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். யஷ்வந்த் சின்ஹாவை தேர்ந்தெடுத்ததில் மம்தா பானர்ஜிக்கு முக்கியப் பங்கு இருந்தது.

அன்றைய சூழலில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதிய பலம் இருந்தது. எனினும், சில எதிர்க்கட்சிகளின் ஆதரவு அக்கூட்டணிக்கு தேவைப்பட்டது. இதனால், அந்த சமயத்தில், அரசியல் செல்வாக்குமிக்க தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்தது நல்ல அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், பாஜக தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததும் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் ஆழ்ந்துவிட்டன. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக நிறுத்தும் என எதிர்க்கட்சிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது திரெளபதி முர்முவை எதிர்ப்பது என்பது ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்தை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என்பதே எதிர்க்கட்சிகளின் அச்சத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.

image

இந்த அச்சம், மம்தா பானர்ஜிக்கு சற்று அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது. ஏனெனில், மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் வாக்கு வங்கி மட்டும் 9 சதவீதம் இருக்கிறது. அதிலும் திரெளபதி முர்முவின் 'சந்தல்' இனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த பழங்குடியினர் வாக்கு வங்கியை குறிவைத்து தான் மேற்கு வங்கத்தில் பாஜக ஊடுருவியது. பழங்குடியினரின் ஆதரவை பெற்றதால் தான், அந்த தேர்தலில் 18 இடங்களை பாஜகவால் கைப்பற்ற முடிந்தது.

இதனை அறிந்துகொண்ட மம்தா பானர்ஜி, அந்த தேர்தலுக்கு பின்னர், பெரு முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் பழங்குடியினர் வாக்கு வங்கியை தன்வசம் இழுத்தார். கடந்த ஆண்டு பேரவைத் தேர்தலில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு இந்தப் பழங்குடியினரின் வாக்கு வங்கிதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது. இவ்வாறு கஷ்டப்பட்டு தன்வசம் வைத்துள்ள பழங்குடியினரின் வாக்கு வங்கியை, இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக இழக்க மம்தா தயாராக இல்லை. அதே சமயத்தில், தானே முன்னின்று அறிவித்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கான ஆதரவையும் அவரால் திரும்பப் பெற முடியவில்லை. மகாராஷ்டிராவில் பாஜக ஆதரவு அரசு அமைந்துள்ளதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெறுவதும் உறுதியாகிவிட்டது.

எனவே தான், பழங்குடியினரின் ஆதரவை தக்க வைப்பதற்காக திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி தற்போது பேசி வருவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/NfIFxJe
via Read tamil news blog

Post a Comment

0 Comments