சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக ஒரேயொரு பக்தரின் 18,001 நெய் நிரப்பிய தேங்காய்களுக்கு 'நெய்யபிஷேகம்' நடைபெற்றது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் தற்போது மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை 4 மணி முதல் பகல் 11.30 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் நடக்கிறது. நெய்யபிஷேகம் செய்யும் ஒருவருக்கு சபரிமலையின் அபிஷேகம் மற்றும் வழிபாடு கட்டணங்களிலேயே மிகக்குறைந்த கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தரான விஷ்ணுகரண் பட் என்ற விவசாயி தனக்கு நினைத்த காரியம் நிறைவேறினால் ஐயப்பனுக்கு 18,001 தேங்காய் மூலம் நெய்யபிஷேகம் செய்வதாக வேண்டி இருந்துள்ளார். அவர் நினைத்தது நிறைவேறியதை தொடர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு அவர் 18,001 நெய் நிரப்பிய தேங்காய்கள் மூலம் நெய் அபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக பெங்களூருவில் இருந்து லாரி மூலம் 20 ஆயிரம் தேங்காய்களை அவர் அனுப்பி வைத்திருந்தார். கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி பம்பை வந்த அந்த லாரியில் இருந்த 7.5 டன் எடையுள்ள தேங்காய்களை தேவசம்போர்டு பணியாளர்கள் இறக்கினர்.
தொடர்ந்து இரவு பகலாக நடந்த தேங்காய்களில் நெய் நிரப்பும் பணி, ஜனவரி 4-ஆம் தேதி இரவு நிறைவடைந்தது. இதற்காக 2,250 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்ட தேய்காய்களில் முதல் தேங்காயை, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கிளிமானூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி, உடைத்து நெய்யை பாத்திரங்களில் நிரப்பினார்.
இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் பகல் 11:30 மணி வரை 18001 தேங்காய்களுக்கும் நெய்யபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு மிகு அபிஷேகத்திற்கு வந்திருந்த பெங்களூரு விவசாயியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
இதற்காக விவசாயியான விஷ்ணுசரண் பட், திருவாங்கூர் தேவசம் போர்டிற்கு பத்து ரூபாய் கட்டணம் வீதம் 18,001 அபிஷேகத்திற்கு 18 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி உள்ளார். சபரிமலை வரலாற்றிலேயே ஒரு ஐயப்ப பக்தர் 18,001 நெய் நிரப்பிய தேங்காய்கள் மூலம் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்தது முதன்முறை என்று தேவசம்போர்டு செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3F2HOx8
via Read tamil news blog
0 Comments